பிரதமரானதும் முதல் முறையாக மும்பை வந்தார் மோடி.. "பார்க்" சென்றார்!
மும்பை: பிரதமரான பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி இன்று மும்பை வந்தார். அவரை விமான நிலையத்தில் மகாராஷ்டிர முதல்வர் பிர்துவிராஜ் சவான் உள்ளிட்டோர் வரவேற்றனர். வரவேற்பைத் தொடர்ந்து பாபா அணு ஆய்வு மையத்திற்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியிலிருந்து மும்பைக்கு வந்தார் பிரதமர் மோடி. பார்க் எனப்படும் பாபா அணு ஆய்வு மையத்திற்குச் செல்லும் மோடி அங்கு விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது, பார்க்கில் நடந்து வரும் பணிகள் குறித்து அவருக்கு விஞ்ஞானிகள் விளக்குவார்கள். மேலும், இந்தியாவின் அணு சக்தித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் மோடிக்கு விளக்கப்படும்.
மோடியின் மும்பை வருகையைத் தொடர்ந்து பார்க் வளாகம் மற்றும் மோடியின் பயணத்திற்குப் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் கே.சங்கரநாராயணன், முதல்வர் பிருத்விராஜ் சவான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பார்க் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் மோடி, டெல்லி புறப்பட்டுச் செல்வார்.