24 மணிநேரத்திற்குள் கொல்கத்தா ஏர்போர்ட்டை தகர்ப்போம்: இமெயில் மூலம் மிரட்டல்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் மேனேஜருக்கு இன்று காலை இமெயில் ஒன்று வந்துள்ளது. அதில், விமான நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமெயில் ஜெர்மனியில் இருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் பயணிகளின் உடைமைகள், வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சைபர் குற்றப்பிரிவு போலீசார் இமெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications