அப்பீல் வழக்கு: ஜெ. தரப்பு வாதத்துக்கு பதிலளிக்க 2 நாட்கள் மட்டும் அவகாசம் கோரும் கர்நாடகா
டெல்லி: அப்பீல் வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் இறுதிவாதத்துக்கு பதிலளிக்க கர்நாடகா அரசுத் தரப்பு 2 நாட்கள் அவகாசம் கேட்கக் கூடும் என தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் இறுதிவாதங்களை முன்வைத்துள்ளனர். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச் முன்னிலையில் நடைபெறும் இந்த விசாரணையின் வழக்கின் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் இறுதிவாதத்தை முன்வைத்திருக்கிறார்.
திமுக பொதுச்செயலர் அன்பழகனும் தமது தரப்பு வாதத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதாடி வருகிறார். வரும் செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் அவர் வாதத்தை தொடங்கி வியாழக்கிழமையன்று நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது வாதங்களை நிறைவு செய்த பின்ன அதற்கு பதிலளிக்க கர்நாடகா அரசு தரப்பு 2 நாட்கள் கால அவகாசம் கேட்கக் கூடும் என தெரிகிறது.
இது தொடர்பாக ஒன் இந்தியாவிடம் பேசிய கர்நாடகா சட்டத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்த பின்னர் அதில் எழும் சந்தேகங்களை சுட்டிக்காட்டி பதில் மனுத்தாக்கல் செய்வோம். இதற்காக 2 நாட்கள் மட்டும் அவகாசம் கேட்கப்படும் என்றன.
மேலும் இவ்வழக்கில் கர்நாடகா அரசு மேல்முறையிட்டு மனுவை தாக்கல் செய்ய உரிமை இல்லை என்றும் ஜெயலலிதா தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அதிக நாட்கள் ஆகாது. இது மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருந்திருந்தால் முதலிலேயே விசாரிக்கப்பட்டிருக்கும். தற்போது அனைத்து தரப்பும் வாதங்களை முன்வைக்க அனுமதித்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நீண்ட நாட்கள் அவசியம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.