தலைவர்களை மாத்திப் பார்க்கலாமா?... காங். மேலிடம் யோசனை!
டெல்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வரும் காங்கிரஸ் மேலிடம் அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர்கள் மீது கவனத்தைத் திருப்பியுள்ளதாம்.
பல மாநிலத் தலைவர்கலின் தலையை உருட்டவும் அது திட்டமிட்டு வருகிறதாம். சரிவர செயல்படாத தலைவர்களை நீக்கி விட்டு நல்ல வலிமையான தலைவர்களை நியமிக்கவும் திட்டமிட்டு வருகிறதாம்.
பெரிய அளவில் கட்சி நிர்வாகத்தை மாற்றியமைக்கவும், கட்சிக்கு உருப்படியாக பணியாற்றுவோருக்கு பதவிகளைக் கொடுக்கும் திட்டமும் உள்ளதாம்.

தொண்டர்களுடன் சம்பந்தமே இல்லையே...
கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும், கட்சி மேலிடத்திடம் தற்போது குறைபட்டு வருவது, கட்சிக்கும், அடிமட்டத் தொண்டர்களுக்கும் இடையிலான தொடர்பு அற்றுப் போய் விட்டது குறித்துத்தானாம்.

ராகுலுக்கு ஆலோசகர்கள் சரியில்லை
மேலும் ராகுல் காந்தியைச் சுற்றி ஆலவட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ஆலோசகர்கள் பலரும் சரியில்லை என்றும், இவர்களால்தான் பல அனுபவஸ்தர்கள் கட்சி மேலிடத்திடம் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மிலிந்த் தியோரா பொறுமல்
இளம் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவும், இதைச் சுட்டிக் காட்டியுள்ளார். தற்போது கட்சி மேலிடத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் யாருமே தேர்தல் அனுபவம் கொண்டவர்கள் அல்ல. இவர்கள் தவறான அறிவுரையைத்தான் தந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் அவர்.

ராகுல் ஆலோசகர்கள் மீது பாய்ச்சல்
மேலும் ராகுல் காந்தியின் ஆலோசகர்களையும் இவர் போட்டுத் தாளித்துள்ளார். இவர்களால்தான் கட்சியின் பெயர் கெட்டுப் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாநிலத் தலைவர்கள் மாறுகிறார்கள்
இப்படிப்பட்ட பின்னணியில் முதலில் மாநில அளவில் கட்சியை மாற்றியமைப்பது குறித்து மேலிடம் சிந்தித்து வருகிறதாம். பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
அப்படியே மக்கள் மனம் அறிந்து, அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கவும் காங்கிரஸ் கட்சி முயன்றால் இன்னும் செளகரியமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications