அண்டை நாடுகளின் இந்தியத் தூதர்கள் மாநாட்டுக்கு மோடி ஏற்பாடு
டெல்லி: பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அண்டை நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தூதுவர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். நாளை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
அண்டை நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்தும் வேலையில் மோடி இறங்கியுள்ளார். இதன் முன்னோட்டமாகவே தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தூதர்களுடன் ஒரு சந்திப்புக்கு நாளை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமை வகிக்கவுள்ளார். இப்படிப்பட்ட மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதுதொடர்பான அழைப்பை வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் அனைத்து அண்டை நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அண்டை நாடு அல்லாத மொரீஷியஸ் நாட்டுக்கான இந்தியத் தூதருக்கும் அழைப்பு போயுள்ளதாம்.