3000 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!
புவனேஷ்வர்: இந்தியாவின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் சக்தி படைத்த அக்னி - 3 ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையானது 3000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கக் கூடிய வல்லமை படைத்தததாகும்.
அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று தாக்கும் வல்லமையுள்ள அக்னி -3 ஏவுகணையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சுமார் 3000 கி.மீ. தூர இலக்கை துல்லியமாகக் குறி வைத்து அழிக்கும் திறன் கொண்ட அக்னி 3 ஏவுகணை ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தின், தம்ரா பகுதியின் வீலர் தீவு கடற்பகுதியில் இன்று பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஒரு பயன்பாட்டு சோதனை என்றும் இது வெற்றிகரமாக இருந்ததாகவும், சோதனை மைய இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் கூறியுள்ளார்.
இன்றைய சோதனையில் 3000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை நோக்கி பாய்ந்த ஏவுகணை 20 நிமிட பயணத்தில் இலக்கை துல்லியமாக தாக்கியது.
தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, இந்த ஏவுகணை 2 கட்டங்களாக செயல்படும். இதன் நீளம் 17 மீட்டர். சுற்றளவு 2 மீட்டர். இதன் மொத்த எடை 50 டன். இந்த ஏவுகணையில் ஒன்றரை டன் எடை கொண்ட அணு ஆயுதம் மற்றும் பிற ஆயுதங்களை பொருத்த முடியும்.
இது 1,500 கிலோ எடையுள்ள வெடிப் பொருளை ஏந்திச் சென்று தாக்கவல்லது.
இந்த ஏவுகணையை மொபைல் லாஞ்சர் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 2006 ஜூலை 9, 2007 ஏப்ரல் 12, 2008 மே 7, 2010 பிப்ரவரி 7, 2013 டிசம்பர் 24 இல் அக்னி 3 சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications