ஜாமீன் கிடைத்து விட்டதாக நினைத்து, வாதம் நடந்தபோதே பட்டாசு வெடித்த அதிமுக தொண்டர்கள்
பெங்களூர்: ஜெயலிலதா மீதான ஜாமீன் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், ஜாமீன் கிடைத்துவிட்டதாக கிளம்பிய வதந்தியை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடிடனர்.
ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கர்நாடக ஹைகோர்ட்டில் வாதத்தை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக அவர் வாதம் செய்தார். ஆனால் வாதம் நிகழ்ந்தபோதே, அதிமுகவினர் மத்தியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக வதந்தி பரவியது.
இதையடுத்து பெங்களூரில் சிறைச்சாலை அருகே குவிந்திருந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் வெளிப்படுத்தினர். அதன்பிறகுதான், சசிகலா ஜாமீன் மனு மீதான விசாரணை வந்தது தெரியவந்தது. எனவே அம்மாவுக்கு இன்னும் ஜாமீன் வழங்கவில்லை என்பதை தெரிந்துகொண்ட அதிமுகவினர் அமைதியாகினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான அன்றும், ஜெயலலிதா விடுதலையாகிவிட்டதாக கருதிக்கொண்டு முன்கூட்டியே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் அதிமுகவினர் கொண்டாடினர். ஆனால் தீர்ப்பு எதிராக வந்ததும் அதிமுக வட்டாரம் சோகமயமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.