ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு செக் வைக்க சசிகலா ஆதரவாளர்கள் புது திட்டம்!
சிறையில் உள்ள சசிகலா பற்றி அவதூறான கருத்துகளை பரப்பி வரும் டிஐஜி ரூபா மீது அவதூறு வழக்கு தொடர அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா பற்றி தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறி டிஐஜி ரூபா மீது அவதூறு வழக்கு தொடர அதிமுக திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா கைதி போல் அல்லாமல் விதிகளை மீறி பல்வேறு சலுகைகளைப் பெறுவதாகக் கூறி பூகம்பத்தை கிளப்பினார் சிறைத்துறைக்கு புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்ட ரூபா. இந்த வசதிகளை சசிகலாவிற்கு செய்து தருவதற்காக டிஜிபி சத்யநாரயணராவ் லஞ்சம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என்றும் ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு ஏற்றார் போல சசிகலாவிற்கு சலுகை செய்து கொடுத்த அறைகளின் புகைப்படங்கள் வெளியாகின. மேலும் சசிகலாவும், இளவரசியும் வெளியில் ஷாப்பிங் சென்று வரும் வீடியோ காட்சிகளும் வெளியாகி எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றின.
அடுத்தடுத்து வெளியான சசிகலா புகைப்பட, வீடியோ காட்சிகளையடுத்து சிறைத்துறை விதிமீறல்கள் குறித்து விசாரிக்க வினய்குமார் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிறையில் நடைபெறும் விதிமீறல்களை பகிரங்கமாகச் சொன்ன டிஐஜி ரூபா போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அவதூறு வழக்கு
இந்நிலையில் சசிகலா குறித்து டிஐஜி ரூபா அவதூறு பரப்பி வருவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அவர் மீது அவதூறு வழக்கு தொடரவும் பெங்களூரு பிரிவு அதிமுக முடிவு செய்துள்ளது.

அறிக்கைக்குப் பின் வழக்கு
கர்நாடக மாநில அதிமுக வழக்கறிஞர்பிரிவு செயலாளர் புகழேந்தி இது குறித்து கூறுகையில், வினய்குமார் அறிக்கையின் முடிவுக்கு காத்திருப்பதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ரூபா மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார். டிஐஜி ரூபாவிடம் சிறை விதிமீறல்கள் குறித்த ஆதாரங்கள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்யட்டும் என்று கூறியுள்ளார்.

குழப்பம்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேவையற்ற அரசியல் குழப்பங்களை சிலர் திட்டமிட்டே டிஐஜி ரூபாவை வைத்து ஏற்படுத்துவதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தினகரனின் கருத்தால் முடிவு
சசிகலா மற்றும் அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அதிகாரிகளிடையேயான மோதலில் தேவையின்றி சசிகலா பெயர் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாக தினகரன் கூறிய நிலையில் ரூபா மீது அவதூறு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications