மீண்டும் வந்தது ஏர் டெக்கான் விமான சேவை... இனி 1 ரூபாயில் பறக்கலாம்!
கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருந்த ஏர் டெக்கான் விமானம் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருந்த ஏர் டெக்கான் விமானம் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விமான சேவை கடந்த 2012ம் ஆனது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மிகவும் குறைந்த விலை பயண கட்டணம் நிர்ணயிக்கும் ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் ஒரு ரூபாயில் டிக்கெட் விற்க போவதாக அறிவித்து இருக்கிறது. இன்னும் சில முக்கியமான எதிர்கால திட்டங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த விமான நிறுவனத்தை சில வருடங்களுக்கு முன்பு கிங் பிஷர் நிறுவனம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தனியாக செயல்பட இருக்கிறது ஏர் டெக்கான் நிறுவனம்.
ஏர் டெக்கான் நிறுவனம்
இந்திய விமான சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஏர் டெக்கான். 2003 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 1 ரூபாய் டிக்கெட் என நிறைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வேகமாக வளர்ந்து வந்தது.
கிங் பிஷரிடம் இணைப்பு
இருப்பினும், ஏர் டெக்கான் விமான நிறுவனம் பல்வேறு காரணங்களால் திடீர் என்று நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக 2008ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை கிங் பிஷர் நிறுவனம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டது. ஆனால் 2012ஆம் ஆண்டு இந்த விமான சேவை திடீர் என்று நிறுத்தப்பட்டது.
மீண்டும் வந்துவிட்டது
இந்த நிலையில் தற்போது ஏர் டெக்கான் மீண்டும் சேவைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனத்தை தொடங்கிய கோபிநாத் தான் மீண்டும் நிறுவனத்தை நடத்த இருக்கிறார். வரும் 22ம் தேதியில் இருந்த விமான சேவை தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஜனவரியில் இருந்து இந்த சேவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். முதல் விமானம் மும்பையில் இருந்து நாசிக் செல்லும். பயண கட்டணம் ரூ.1 என்ற அளவில் மீண்டும் சேவையை தொடங்க உள்ளது ஏர்டெக்கான்.
புதிய வாசகம்
''எளியவர்களும் மேகத்தில் பறக்கலாம்'' என்ற வாசகத்தோடு ஏர் டெக்கான் விமானம் பறக்க இருக்கிறது. புகழ்பெற்ற ஓவியர் ஆர்.கே லக்ஷ்மன் வரைந்த ஓவியம் இதில் லோகோவாக பயன்படுத்தப்பட இருக்கிறது. எளியவர்களும் விமானத்தில் பறக்கக்கூடிய வகையில் மத்திய அரசு உருவாக்கிய திட்டங்கள் தான் மீண்டும் சேவையை தொடங்கியதற்கு காரணம் என்று இதன் நிறுவனர் கோபிநாத் தெரிவித்து இருக்கிறார்.