ஷாப்பிங் போய்ட்டு சாவகாசமாக வந்த ரேணுகா... லேட்டாக புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா!
டெல்லி: காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் ஷாப்பிங் சென்று விட்டு தாமதமாக திரும்பியதால், ஏர் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டு சென்ற சம்பவத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி. இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி வழியாக ஹைதராபாத் நகருக்கு செல்லும் ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார் ரேணுகா.

விமானம் மாலை 7 மணியளவில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. விமானத்தில் அவரது உடமைகள் அனைத்தும் ஏற்றப்பட்டு விட்ட நிலையில் ரேணுகா சவுத்ரி மட்டும் வரவில்லை. பின்னர் விமான பயணிகளுக்கான இறுதி அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் ரேணுகா சவுத்ரி மட்டும் விமானத்தில் ஏறவில்லை.
அதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அவரது உடமைகளை உடனடியாக இறக்கிவிட முடியாது என்ற நிலையில், ரேணுகா சவுத்ரியின் பெயரை விமான நிலைய பணியாளர்கள் பலமுறை மீண்டும், மீண்டும் அழைத்தனர். ஆனால், தொடர்ந்து அவர் வராததால், விமானம் புறப்படவில்லை.
இறுதியாக ஷாப்பிங் செய்த களைப்புடன் ரேணுகா, விமான நிலையத்துக்குள் நுழைந்தார். இதற்கிடையில், விமானம் புறப்படுவதற்கு அளிக்கப்பட்ட நேரம் கடந்து விட்டது. எனவே, மீண்டும் புதிய அறிவிப்பு வரும்வரை விமானி காத்திருக்க வேண்டியதாகி விட்டது. இதனால், விமானம் அன்று சுமார் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது தொடர்பாக ஏர் இந்தியா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை மறுத்துள்ள ரேணுகா சவுத்ரி, ‘நான் ஷாப்பிங் சென்றதால்தான் விமானம் தாமதமாக புறப்பட்டது என்று கூறுபவர்கள், இதை நிரூபிக்க முடியுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications