ரூ.100 டிக்கெட் - வேலையே செய்யாத வெப்சைட்: ஏர் இந்தியா மீது 'கொலவெறி'யில் மக்கள்
டெல்லி: ரூ.100க்கு சலுகை விலையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏர் இந்தியா இணையதளத்திற்கு சென்ற மக்கள் அது வேலை செய்யாததால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒன்றாக்கப்பட்டன. இந்த 2 நிறுவனங்கள் ஒன்றான நாளை கொண்டாட ஏர் இந்தியா தினம் அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா ரூ.100க்கு விமான டிக்கெட் அளிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அறிவிப்பை அடுத்து சலுகை விலையில் டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை துவங்கியது.
முடக்கம்
சலுகை விலையில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய மக்கள் முந்தியடித்ததால் ஏர் இந்தியா இணையதளம் புதன்கிழமை செயல் இழந்து போனது.
பிசி
நேற்று டிக்கெட் முன்பதிவு செய்ய ஏர் இந்தியா இணையதளத்திற்கு சென்றவர்களுக்கு சிஸ்டம் பிசி சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும் என்று தான் வந்தது.
5 நாட்களுக்கு மட்டுமே
புதன்கிழமையில் இருந்து 5 நாட்களுக்கு மட்டுமே வெறும் ரூ.100க்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பதால் மக்கள் இந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை.
இன்று
எப்படியாவது ரூ.100க்கு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட வேண்டும் என்று பலர் ஏர் இந்தியா இணையதளத்திற்கு இன்று சென்றனர். ஆனால் இணையதளம் இன்று படு ஸ்லோ. இந்த சேவை இல்லை என்று வேறு வருகிறது. இதனால் ஏர் இந்தியா மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
கோபம்
ஏர் இந்தியாவால் கையாள முடியவில்லை என்றால் ஏன் அத்தகைய சலுகைகளை அறிவிக்கிறார்கள். சலுகையாவது மண்ணாவது இது வெறும் கண்துடைப்பு. மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். நான் நாள் முழுவதும் பல்வேறு சிஸ்டம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றும் முடியவில்லை என்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சாஹில் கபூர் தெரிவித்தார்.