விடாது கருப்பு... தயாநிதி, கலாநிதி மாறனை விடுவித்ததை எதிர்த்து அப்பீல் செய்கிறது சிபிஐ?
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்துள்ளார். இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்குகளில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்பளித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகிய மூவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி மாறனை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.