டெல்லி ரயிலில் மோடி -அமீத் ஷா படத்துடன் கூடிய டீ கப்... "விசாரணை" நடத்துகிறது ரயில்வே!
ஜலந்தர்: டெல்லி - அமிர்தசரஸ் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமீத் ஷா ஆகியோரது படத்துடன் கூடிய பேப்பர் கப்களில் பயணிகளுக்கு டீ வழங்கப்பட்டது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மோடி, ஷா படம் போட்ட டீ கப்களை ரயிலில் பயன்படுத்தியது தவறுதான் என்று வடக்கு ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் நீரஜ் சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அந்த டீ கப்பில் மோடி, ஷா படத்தைப் போட்டு பாஜகவில் சேருங்கள் என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த கப்களை வழங்கியது யார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த ரயிலில் உள்ள ஊழியர்கள் இந்த கப்களில்தான் பயணிகளுக்கு டீ வழங்கினர். இது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.
பாஜகவினருக்காக தயாரிக்கப்பட்ட இந்த டீ கப் எப்படி ரயிலில் வந்தது என்பதும் சலசலப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் காங்கிரஸ் தலைவர் வீரேந்தர் சர்மா இந்த கப் விவகாரம் பாஜகவின் திட்டமிட்ட செயல் என்று விமர்சித்திருந்தார். மேலும், டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரயில் பயணிகளிடம் பாஜக தனது அரசியலைச் செய்து மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.