எல்லா கண்களுமே கர்நாடகா ஹைகோர்ட் 'அறை எண் 14' நோக்கி... அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?
பெங்களூரு/சென்னை: கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் அறை எண் 14... இந்திய அரசியலின் அனைத்து கண்களும் தற்போது இந்த அறையை நோக்கியே திரும்பி இருக்கின்றன.. இந்த அறையில்தான் தமிழக முன்னாள் ஜெயலலிதாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுகிறது..
இந்திய நீதித்துறையே அலுத்து சலித்துப் போக வைத்தது ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. சுமார் 18 ஆண்டுகாலம் நடைபெற்றது இந்த வழக்கு.. எவ்வளவெல்லாம் இழுத்தடிக்க முடியுமோ சட்டத்தின் எத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்த முடியுமோ அத்தனையையுமே ஒரு கைபார்த்துவிட்டது ஜெயலலிதா வழக்கு.

4 ஆண்டு தண்டனை
இவ்வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக குன்ஹா அறிவித்ததால் அவர் பதவி இழந்தார்.. 10 ஆண்டுகாலம் அரசியலில் தலையெடுக்க முடியாத நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

41 நாட்கள் அப்பீல் விசாரணை
வரலாற்றின் விசித்திரம் இதுதான்.. 18 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட ஒருவழக்கின் மேல்முறையீட்டு மனு மீது 41 நாட்களிலேயே விசாரணை முடிவடைந்து இதோ இன்று தீர்ப்பு வரப்போகிறது..அந்த அளவுக்கு இந்திய நீதித்துறையை எரிச்சலூட்டியிருக்கிறது இந்த வழக்கு என்பது மிகையும் அல்ல..
இன்னும் சில மணிநேரத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க இருக்கிறார்..அவர் தீர்ப்பளிக்க இருக்கும் அறை எண் 14... இந்த அறையில் உச்சரிக்கப்படும் தீர்ப்பு ஜெயலலிதாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது...

அரசியலில் அடுத்து என்ன?
இது ஒருபுறமிருக்க ஜெயலலிதாவின் தீர்ப்பை முன்வைத்து அடுத்த அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க தமிழக கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக அதாவது சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டால் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுமே தங்களை அடுத்த மாற்றாக முன்னிறுத்த முனைப்பு காட்டும்.

போராடும் அ.தி.மு.க.
அண்ணா தி.மு.கவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வழக்கமாக எத்தனை விதமான போராட்டங்களை நடத்த முடியுமோ அத்தனை விதமான போராட்டங்களையும் முயற்சித்துப் பார்த்துவிடும்...

தி.மு.க.வின் புதிய அணி
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தை நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.. இதனால் இனி தி.மு.க.வே அடுத்த பெரிய கட்சி.. தங்களது தலைமையிலேயே புதிய அணிஅமைக்க வேண்டும் என்பதில் மும்முரம் காட்டும்.
அண்ணா தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படும் நிலையில் தே.மு.தி.க.வோ தி.மு.க.வுடன் கைகோர்த்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க காய்களை நகர்த்தும்..

பா.ம.க.
அதேபோல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும் புதிய கூட்டணி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியாத என இன்னொரு பக்கம் வியூகம் வகுப்பார்...

பா.ஜ.க.
இவைகளுக்கு அப்பால் பாரதிய ஜனதாவோ தி.மு.க. அல்லாத ஒரு புதிய அணியை தங்களது தலைமையில் உருவாக்க பெரும் முயற்சி எடுக்கும்... மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அனைத்து வித அஸ்திரங்களையும் அந்த கட்சி பயன்படுத்தும்...
இன்னும் சில மணிநேரங்களில்.. அடுத்து என்ன என்பது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications