9 பேர் பலி.. 5 பேர் சுட்டுக்கொலை.. 2007ல் நடந்த குண்டுவெடிப்பு.. மெக்கா மசூதி வழக்கு முழு விவரம்!
ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு பற்றிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு பற்றிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. 2 பேர் இதில் தலைமறைவாகிவிட்டனர். ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார்.
இந்த மோசமான குண்டுவெடிப்பிற்கு பின் இந்தியாவில் பல இஸ்லாமிய மசூதிகள் தாக்கப்பட்டது. தொடர்ச்சியாக மோசமான சம்பவங்கள் நடந்தது. இதில் எல்லாவற்றிலும் இந்துத்துவா அமைப்புகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
எப்போது
ஹைதராபாத்தில் இருக்கும் புகழ்பெற்ற மெக்கா மசூதியில்தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. மே மாதம் 18ம் தேதி 2007ல் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அது வெள்ளிக்கிழமை என்பதால் அதிக அளவில் மக்கள் உள்ளே இருந்தனர். இதில் 9 பேர் மரணம் அடைந்தனர். 58 பேர் காயம் அடைந்தனர். அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் மரணம் அடைந்தனர்.
சிபிஐ விசாரணை
இதன் முதற்கட்ட விசாரணை ஹைதராபாத் போலீசால் செய்யப்பட்டது. அதன்பின் இந்த விசாரணை சிபிஐ வசம் மாற்றப்பட்டது. கடைசியாக 2011ல் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க தொடங்கியது. இந்துத்துவா அமைப்புகளில் தொடர்புடைய பத்து பேர் இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்டார்கள்.
தீவிரமான விசாரணை
கடைசியில் அந்த பத்து பேரில் ஐந்து பேர் மீது சந்தேகம் வலுத்தது. தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்தா, பாரத் மோகன்லால், ராஜேந்திர சௌத்திரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட சந்தீப், ராசேந்திரா ஆகியோர் தலைமறைவானார். சுனில் ஜோஷி என்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே கொலை செய்யப்பட்டு மரணம் அடைந்தார்.
226 பேர் சாட்சி
இந்த வழக்கில் 226 பேர் சாட்சி வழங்கினார்கள். 411 ஆவணங்கள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சுவாமி அசீமானந்தா, பாரத் மோகன்லால் பெயிலில் வெளியேறினார்கள். மற்ற நபர்கள் ஹைதராபாத் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். 2017 மார்ச்சில் ராஜஸ்தான் நீதிமன்றம் தேவேந்திர குப்தா உள்ளிட்டு சில பேருக்கு மட்டும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இறுதி தீர்ப்பு
என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட 5 பேரும் நிரபராதிகள் என்று கூறியுள்ளது. இவர்கள்தான் குற்றம் செய்தது என்பதற்கான ஆதாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று ஹைதராபாத் என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.