மண்டைக்கேறிய போதை கணவர்களை உதறி தள்ளிவிட்டு.. கோயிலில் திருமணம் செய்து கொண்ட 2 மனைவிகள்.. அட ஈஸ்வரா
கான்பூர்: குடிகார கணவன்களிடம் வாழ்வதைவிட, பேசாமல் நாமளே கல்யாணம் செய்துக்கலாம் என்று 2 மனைவிகள் முடிவெடுத்துள்ளனர்.. அதன்படியே சிவன் கோயிலில் இரண்டு பெண்களும் மாலை மாற்றி திருமணமும் செய்து கொண்டனர்.. இதைப்பார்த்து கோயிலிலிருந்த பக்தர்கள் வாயடைத்து போய் நின்றுவிட்டார்கள்.
உத்தர பிரதேசத்தில் தியோரியா நகரில் பிரபலமான சிவன் கோவில் ஒன்று உள்ளது... இந்த கோயிலுக்கு நேற்று முன்தினம், கவிதா மற்றும் குஞ்சா என்ற பப்லு ஆகிய 2 பெண்கள் வந்திருந்தனர்.. இருவருமே கோயிலில் சாமி கும்பிட்டார்கள்.. பிறகு திடீரென அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொண்டனர். இதனை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குங்குமம், சடங்கு: ஆனால், இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.. மாலை மாற்றிக் கொண்டதுமே, குஞ்சா மணமகன் போல் கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தார்.. பிறகு இருவரும் கழுத்தில் மாலையுடனேயே அனைத்து திருமண சடங்குகளையும் ஒன்றுவிடாமல் செய்தனர்.
இந்த திருமணம் பற்றி குஞ்சா சொல்லும்போது ,"நாங்கள் 2 பேரும் முதன்முதலாக இன்ஸ்டாகிராம் வழியே தொடர்பு கொண்டோம். நாளடைவில் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தோம். அவரவர்களின் குடும்ப கதையை பேசிக்கொண்டோம். அப்போதுதான் எங்களது இருவரின் கணவர்களுமே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது.
பொறுக்க முடியல: தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து தகராறில் ஈடுபடுவார்கள்... கணவர்கள் தினமும் செய்யும் டார்ச்சர்களை நாங்கள், பரிமாறி கொண்டோம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், நாங்களே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.

கணவர்களால் அளவுக்கு அதிகமான துன்புறுத்தல்களுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம்.. இனிமேலாவது அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடிவு செய்தோம். ஒரு சிறந்த தம்பதியாக கோரக்பூரில், எங்கள் வாழ்க்கையை துவங்க போகிறோம். ஆனாலும் நாங்கள் இருவரும் சிறப்பாக குடும்பம் நடத்த வேண்டும் என்பதால், வேலைக்கு செல்ல போகிறோம்" என்றார்.
கோவில் பூசாரி: இந்த திருமணம் பற்றி கோவில் பூசாரி உமா சங்கர் பாண்டே சொல்லும்போது, அந்த பெண்கள் 2 பேரும் திருமண மாலைகள் மற்றும் குங்குமம் ஆகியவற்றை வாங்கி கொண்டு வந்து, சடங்குகளை செய்தனர். திருமணம் முடிந்ததும் அமைதியாக திரும்பி சென்று விட்டனர் என்றார். உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த திருமணத்தால், 2 பெண்களின் கணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என மொத்த பேரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications