அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு.. கன்னட நடிகர் மீது தலித் அமைப்பினர் கருப்பு மை வீச்சு
பெங்களூர்: அம்பேத்கர் பற்றி அவமரியாதையாக பேசிய கன்னட நடிகர் முகத்தில் தலித் சங்கர்ஷ சமித்தி அமைப்பினர் கருப்பு மை பூசிய சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலர்-கன்னடா என்ற தனியார் தொலைக்காட்சி சேனல், பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது. இதில் கன்னட நடிகர் 'ஹுச்சா' வெங்கட் என்பவரும் பங்கேற்றிருந்தார். ஆனால் ஷோவுக்கு நடுவே, சக போட்டியாளரோடு கைகலப்பில் ஈடுபட்டதாக கூறி, வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியில் நடந்தவை குறித்து, பல்வேறு கன்னட செய்தி தொலைக்காட்சி அரங்கங்களுக்கும் சென்று, பேட்டியளித்து வந்தார் வெங்கட். இதேபோல, இரு நாட்கள் முன்பு, ஒரு செய்தி சேனலில் பேட்டியளித்தபோது, சட்ட மேதை அம்பேத்கர் பற்றி அவமரியாதையாக பேசியுள்ளார்.
இந்நிலையில், மற்றொரு டிவி சேனலுக்கு நேற்றிரவு தனது காரில் சென்றுகொண்டிருந்தார் வெங்கடேஷ். அப்போது வழி மறித்த தலித் சங்கர்ஷ சமித்தி என்ற தலித் அமைப்பை சேர்ந்தவர்கள், வெங்கட் முகத்தில் கருப்பு மையை ஊற்றினர்.
காருக்குள் இருந்த வெங்கட்டை கீழே இறங்குமாறி, கூறி, அடித்தனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்கு பிறகு, அம்பேத்கர் பற்றிய கருத்துக்காக, வெங்கட்டை போலீசார் கைது செய்தனர். மை ஊற்றிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.