இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம்: அமித் ஷாவின் "சாகிபு" யார்? மோடிக்கு நெருக்கடி?
அகமதாபாத்: தன்னுடைய 'சாகிபு' (ஐயா) என்ற தலைவருக்காக இளம்பெண் ஒருவரை வேவு பார்த்ததாக குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் குஜராத்தின் முன்னாள் அமைச்சருமான அமித் ஷா மீதான குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மோடிக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
புலனாய்வு இணைய தளங்களான கோப்ராபோஸ்ட் மற்றும் குலைலன் ஆகியவை அண்மையில் தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டது. அந்த உரையாடல்கள் 2009ம் ஆண்டு குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கும் குஜராத் மாநில காவல் உயரதிகாரி ஜி.எல். சிங்காலுக்கும் இடையே நடைபெற்றவை.

இந்த சிங்கால்தான் இளம்பெண் இஸ்ரத் ஜஹான் போலியாக எண்கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொலைபேசி உரையாடல், "The Stalkers" என்ற தலைப்பில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் மற்றும் ஆர்.டி.ஐ ஆர்வலர் அருணாய் ராய் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இளம்பெண் ஒருவரை குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்பு காவல் படை மூலம் வேவு பார்க்க அமித் ஷா உத்தரவிடுகிறார். மும்பை விமான நிலையத்தின் பொது அழைப்பகத்திலிருந்து அந்த பெண் எந்தெந்த எண்களைத் தொடர்பு கொண்டுள்ளார் என்பது மட்டுமின்றி, அவருடைய உறவினர் மற்றும் நண்பர்களின் தொலைபேசிகளும் பதிவு செய்யப்படுகின்றன.
அவர் வணிக வளாகம் சென்றது, ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்றது, உணவகம் சென்றது, உடற்பயிற்சிக் கூடம் சென்றது, திரையரங்கு, ஹோட்டல், விமான நிலையம் மற்றும் மருத்துவமனை சென்றது என அனைத்து நடவடிக்கைகளும் வேவு பார்க்கப்பட்டு அவ்வப்போது அமித் ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதும் தொலைபேசி உரையாடலில் பதிவாகியுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்தக் குற்றச்சாட்டு உண்மையானால் பாஜக தன்னுடைய பிரதமர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications