அமித் ஷா யோகா செய்வதை கிண்டலடிப்பதா... நிதீஷுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்
பாட்னா: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாட்னாவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு யோகா கற்றுத் தரப்போகிறார் முஸ்லீம் ஆசிரியர் முகம்மது தமன்னா.
இந்த தகவலை பீகார் - ஜார்கண்ட் பதஞ்சலி யோகா பீடத்தின் பொறுப்பாளர் அஜீத்குமார் கூறியுள்ளார்.
யோகா நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பது பற்றி நிதிஷ் குமார் கிண்டலடித்துள்ளதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. வருகிற 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர் அமித்ஷா பாட்னாவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின.
அன்றைய தினம் முகம்மது தமன்னா, அசோக் சர்க்கார் ஆகியோர் யோகா கற்றுத் தரப்போகின்றனர். அமித்ஷாவிற்கு சில ஆலோசனைகளையும் தமன்னா வழங்குவார் என்று அஜீத்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ராஜீவ் பிரதாப் ரூடி, ராதாமோகன் சிங் உள்ளிட்டவர்களும் இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
யோகா நிகழ்ச்சி பற்றி கருத்து கூறியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இது பாஜக நடத்தும் பப்ளிசிட்டி என்றார். அமித்ஷா பங்கேற்பது குறித்து கருத்து கூறிய அவர், அமித்ஷாவின் உடலும், உருவமும் இருக்கும் நிலையை பார்த்தால் யோகா செய்வது அவருக்கு ஏற்றது தானா என்ற கேள்வி எழுகிறது. அமித்ஷா தினமும் வீட்டில் முறையாக யோகா செய்ய பழகிக் கொள்ள வேண்டும். இது அவருக்குள் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கி தரும் என்று அறிவுரை வழங்கியிருந்தார்.
இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். நிதிஷ்குமார் ஏன் டென்சன் ஆகவேண்டும், அவர் பிராணாயாமம் செய்தால் அவருக்கு மன அமைதி கிடைக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.












Click it and Unblock the Notifications