சோம்நாத் கோவில் அறங்காவலராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நியமனம் !
டெல்லி: புகழ்பெற்ற சோம்நாத் கோவிலின் அறங்காவலராக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின் சோம்நாத் சிவன் கோவில் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்று. வரலாற்று காலங்களில் பல முறை படையெடுப்புக்குள்ளானது. தற்போதைய சோம்நாத் கோவிலானது 1947ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்துக்களின் 12 புனித சிவாலயங்களில் இதுவும் ஒன்று.

இந்தக் கோவிலின் டிரஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் டெல்லி இல்லத்தில் சோம்நாத் கோவில் அறங்காவலர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பி.கே. லெஹரி, ஹர்ஸ்வர்த்தன் உள்ளிட்ட அறங்காவல் குழுவினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சோம்நாத் கோவில் அறங்காவல் குழு தலைவராக கேசுபாய் பட்டேலுக்கு மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனிடையே சோம்நாத் கோவில் அறங்காவலராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நியமனம் செய்யப்பட்டார்.
சோம்நாத் கோவிலை ஒரு முதன்மையான சுற்றுலா தலமாக முன்னேற்றுவதன் அவசியம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். இது தொடர்பாக ஒரு மெய்நிகர் கலை அருங்காட்சியகம் மற்றும் கலையரங்கம் உருவாக்குவது. சோம்நாத் கோவில், டையூ மற்றும் சிங்கங்கள் அதிகமுள்ள கிர் தேசிய பூங்கா ஆகியவற்றை இணைத்து ஒரு சுற்றுலா வளையத்தை உண்டாக்கவும் மோடி ஆலோசனை வழங்கினார்.












Click it and Unblock the Notifications