மாதா அமிர்தானந்த மயி 61 வது பிறந்தநாள் 2 நாட்கள் கோலாகலம்
கொல்லம்: அமிர்தானந்த மயி தேவியின் 61 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி கொல்லத்தில் உள்ள அமிர்தபுரியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு இலவச போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமிர்தானந்த மயி மடம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மாதா என்று பல நாட்டை சேர்ந்தவர்களால் அன்பாக அழைக்கப்படும் மாதா அமிர்தானந்த மயி தேவியின் 61-வது பிறந்த நாள் விழா வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கொல்லம் அமிர்தபுரியில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கலை, கலாசாரம், கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் மேம்பாடு, மனிதநேயம், மனித குல ஒற்றுமை மற்றும் உலக அமைதி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு விதமான பல்சுவை நிகழ்ச்சிகளும், பொருட்காட்சிகளும் நடைபெற உள்ளன.
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தர உள்ள அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் குறிப்பாக கிராங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
ஏழைகள் மற்றும் வறுமையில் வாடுபவர்களுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு இலவச போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட சேர்ந்தவர்களும், இந்த ஏற்பாடுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். மேற்கண்ட தகவல் கன்னியாகுமரி மாதா அமிர்தானந்த மயி மடத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.