எனது இணையப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன... திக்விஜய் சிங் காதலி போலீசில் புகார்
டெல்லி: தனது இமெயில் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் காதலியான டி.வி. பெண் நிருபர் அம்ரிதாராய் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங், மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தவர். இவர் தனக்கும் டி.வி. பெண் நிருபர் அம்ரிதாராய்க்கும் இடையே மலர்ந்த காதலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பாக ‘டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் அவர், ‘‘அம்ரிதா ராயுடனான எனது உறவு குறித்து ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை'' எனத் தெரிவித்திருந்தார். இதேபோன்று அம்ரிதாராயும் திக்விஜய் சிங்குடனான காதலை டுவிட்டர் வாயிலாகவே வெளிப்படுத்தினார்.
அம்ரிதா ராய் தனது கணவரை விவாகரத்து செய்த பின்னர், திக்விஜய் சிங்கை மணந்து கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
.
இந்நிலையில், தனது இமெயில், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார் அம்ரிதா. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் டெல்லி குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அம்ரிதாராய் கூறியிருப்பதாவது, ‘எனது இமெயில்/கம்யூட்டர் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மிகவும் முக்கியமான குற்றம் மற்றும் எனது தனியுரிமை அத்துமீறப்பட்டுள்ளது. நான் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.