பிளாஸ்டிக் பையில் தமிழ்நாட்டு பெண் உடல்.. அஸ்ஸாமை உலுக்கிய கொலை.. ராணுவ அதிகாரி கைது.. ஷாக் தகவல்
அசாம் மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அசாம் மாநிலம் காமரூப் மாவட்டத்தில் சாங்சாரி பகுதியில் கடந்த 15-ந்தேதி ஒரு பெண் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அந்த உடல் ஒரு பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்டு நெடுஞ்சாலையோரம் வீசப்பட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் தகவல் அறிந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர். அந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்,. கொலை செய்தது யார் என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.

கொலையில் முடிந்தது
கொல்லப்பட்ட அந்தப் பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த லலிதா (வயது 35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவருடைய கொலைக்கு யார் காரணம் என போலீசார் விசாரித்தனர். அதில், அந்தக் கொலையை செய்தது ராணுவ அதிகாரி மரிந்தர் சிங் வாலியா என்பது போலீசுக்கு விசாரணையின் போது தெரியவந்தது.

திருமணத்தை மீறிய உறவு
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மரிந்தர் சிங் வாலியா, லெப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். அசாம் தேஜ்பூரில் ராணுவ மக்கள்தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், ராணுவ அதிகாரி அமரிந்தர் சிங்குக்கும் இடையே நீண்டகாலமாக திருமணத்தை மீறிய உறவு இருந்ததாம்.

கொலை எப்படி
இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்காக அந்தப் பெண் லலிதா, கடந்த 14-ந் தேதி காதல் தினத்தன்று டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வந்திருக்கிறாராம். இந்நிலையில் வந்த இடத்தில் தகராறு ஏற்பட்டு அது கொலையில் முடிந்திருக்கிறது. கொலை செய்து இரவோடு இரவாக உடலை பிளாஸ்டிக் பேக்கில் வைத்து சாலையோரம் போட்டுச்சென்றிருக்கிறார் ராணுவ அதிகாரி மரிந்தர் சிங். தமிழ்நாட்டு பெண்ணை கொலை செய்ததை அமரிந்தர் சிங் ஒப்புக்கொண்டார் என தேஜ்பூர் போலீசார் தெரிவித்தனர். அவரை என்ன காரணத்திற்காக ராணுவ அதிகாரி கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

போலீசார் தகவல்
இதனிடையே ராணுவ அதிகாரி அமரிந்தர் சிங் வாலியாவை விசாரணைக்கு பின்னர் தேஜ்பூர் போலீசார், நேற்று கைது செய்தனர். கொல்லப்பட்ட பெண், மேற்கு வங்காளத்தின் ஹவுரா ரெயில் நிலையத்தில் விட்டுச் சென்றதாக கருதப்படும் அவரது 4 வயது மகளை மீட்டிருப்பதாக அசாம் சோனிட்பூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் முதலில் வாரணாசி சென்றதும், பின்னர் கவுகாத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications