சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் 'பந்த்' .. இயல்பு வாழ்க்கை முடங்கியது! தமிழக பஸ்கள் நிறுத்தம்!!
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. இதற்கு அனைத்து எதிர் கட்சியினரும், பல்வேறு சங்கங்களும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த முழுஅடைப்பையொட்டி ஆந்திராவில் அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஆட்டோக்கள் ஓடாது. ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.
பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பால், மருந்து, காய்கறி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே இந்த முழு அடைப்பால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. தமிழக அரசுப் பேருந்துகள் ஆந்திரா எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தால் ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications