ஆண்டவன் சொன்னார்.. நான் செய்தேன்.. அருணாச்சலம் படம் பாணியில் பன்ச் அடித்த சந்திரபாபு நாயுடு
விஜயவாடா: ஆந்திர மாநில நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் பணி திருமலை திருப்பதியில் இருந்து தொடங்கியுள்ளதாகவும், திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்புகள் கலப்படம் செய்யப்பட்டது குறித்து நான் பேச வேண்டும் என்று கடவுள் விரும்பியிருக்கலாம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி கூறியிருந்தார்.
குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் பணி திருமலை திருப்பதியில் இருந்து தொடங்கியுள்ளதாகவும், திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்புகள் கலப்படம் செய்யப்பட்டது குறித்து நான் பேச வேண்டும் என்று கடவுள் விரும்பியிருக்கலாம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில, நான் முதல்வராக பதவியேற்ற சில நாள்களிலேயே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயல் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தவறு செய்த சப்ளையர்களை பிளாக் லிஸ்டில் சேர்க்கப்பட்டனர்.
திருப்பதியின் புனிதத்தைக் காக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அவரிடம் எடுக்கச் சொன்னேன். அவரும் அதுகுறித்து வெளிப்படுத்தாமல் அமைதியாக அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு குறித்து நான் பேச வேண்டும் என்று கடவுள் விரும்பியிருக்கலாம் என்று நினைக்கிறேன். நாம் வெறும் கருவிகள் மட்டுமே. இறைவன்தான் அனைத்தையும் செய்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
ரிவர்ஸ் டெண்டர் எனும் பெயரில் நெய்யின் தரத்தில் நாம் எப்படி சமரசம் செய்து கொள்ள முடியும். இது தரத்தைப் பற்றியது மட்டுமல்ல கடவுளின் புனிதமான நடைமுறை மற்றும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிப்பதாகும். மத உணர்வுகள், மரபுகள், மத நடைமுறைகளுடன் யாரும் விளையாட முடியாது. கோயிலில் கலப்பட நெய் விநியோகம் செய்தவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்ட நிலையில் அதற்கு பதிலளிப்பதற்கு ஒய்எஸ்ஆர்சிபி மறுத்துவிட்டது. தங்களுடைய தவறை ஒப்புக் கொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று வெட்கமே இல்லாமல் திசைதிருப்புகின்றனர். கோயில்களின் புனிதம், பக்தர்களின் உணர்வுகளைப் பாதுகாப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும்.
ஒவ்வொரு மதத்துக்கும் அதன் சொந்த மரபுகள், பழங்கவழக்கங்கள் உள்ளன. அவை பாதுகாப்பட வேண்டியது அவசியம் என்று கூறி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது கோயில்களில் நடந்த பல தவறுகளை சுட்டிக் காட்டினார். மேலும், ஜீயர்கள், காஞ்சி பீடாதிபதிகள், சனாதன தர்ம அறிஞர்கள் ஆகியோரிடம் லட்டு பிரசாதம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications