தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு:டெல்லியில் ஆந்திர முதல்வர் போராட்டம்? ஜனாதிபதியை சந்திக்கிறார்!!
தெலுங்கானா தனி மாநில மசோதாவை நிராகரித்து ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்பிவிட்டது ஆந்திர சட்டசபை. இதனால் நாளை கூடும் நாடாளுமன்ற இறுதி கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதா மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையில் தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி டெல்லிக்கு இன்று வரும் கிரண்குமார், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக டெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலையில் நடைபெறவுள்ளது. அதில், தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மத்திய அரசின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அல்லது நாளை மறுநாள் ஆந்திர அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை பேரணி நடத்தவும் கிரண் குமார் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இதில் தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் இன்று டெல்லி வருகிறார். அவரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து தெலுங்கானாவுக்கு எதிராக முறையிட திட்டமிட்டுள்ளார்.