திருப்பதி பிரமாணப் பத்திரத்தில்.. கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்.. என்ன காரணம் தெரியுமா?
அமராவதி: திருப்பதியில் பவன் கல்யாண் தனது தீட்சை பரிகாரத்தை இன்று நிறைவு செய்யவுள்ள நிலையில், சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள் நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். பவன் கல்யாணும், அவரது மகளும் பத்திரத்தில் கையெழுத்து போடும் புகைப்படங்கள் ஜனசேனா கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. பவன் கல்யாண் மற்றும் மகள் திருப்பதி பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து போட்டது ஏன் என தெரிந்து கொள்ளலாம்.

திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று குற்றச்சாட்டு வைத்தார்.
இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருமலையில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு பிரச்னை காரணமாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பரிகார தீட்சை மேற்கொண்டார். கோயில்களில் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். அந்தப் பரிகார தீட்சை இன்றுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக திருப்பதிக்கு வந்த பவன் கல்யாண் அலிபிரி மலைப் பாதை வழியாக பாத யாத்திரையாக நேற்று சென்றார். பவன் கல்யாணுடன் அவரது மகள்கள் ஆத்யா மற்றும் போலேனாவும் திருப்பதி கோயிலுக்கு வந்துள்ளனர்.
இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர் திருப்பதியில் சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன்பு சுவாமி மீதுள்ள தங்களது நம்பிக்கையை தெரிவிக்கும் வகையில் திருப்பதி பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடும் நடைமுறை பல ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ளது. இது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொது விதிமுறைகள் விதி 136 இன் படி கடைப்பிடிக்கப்படுகிறது.
பவன் கல்யாணின் மகள் போலேனா அவரது மூன்றாவது மனைவியான அன்னா லெஷ்னேவாவுக்கு பிறந்தவர். போலேனா இந்து அல்லாதவர் என்பதால் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு முன்பாக அவர் பிரமாணப் பத்திரிகையில் கையெழுத்திட்டார். மேலும், போலேனா 18 வயதுக்கு உட்பட்டவர். அதனால், பவன் கல்யாணும் தனது மகளின் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து போட்டார்.
ஏற்கனவே, திருப்பதி கோயிலுக்கு ஜெகன்மோகன் ரெட்டி செல்வதாக இருந்த நிலையில் ஏழுமலையான் மீது நம்பிக்கையுள்ளது என தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னரே ஜெகனை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் கோரிக்கை வலுத்ததால் ஜெகன்மோகனின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பவன் கல்யாண் தனது மகளை பிரமாணப் பத்திரிகையில் கையெழுத்து போட வைத்ததன் வாயிலாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு பவன் கல்யாண் மறைமுகமான பாடத்தை கற்பித்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications