சட்டவிரோத ஆயுத கடத்தல் கும்பல் கைது! கர்நாடக பாஜக எம்.எல்.ஏவுக்குள்ள தொடர்பு அம்பலம்
பெங்களூர்: சட்டவிரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்து வந்த கும்பலை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கும்பலுக்கும் பெல்லாரி மாவட்ட பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்த்பூர் ரயில்வே நிலையத்தில், சமீபத்தில், ஆயுத விற்பனை கும்பலை சேர்ந்த 4 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுவாக ஆயுத விற்பனை கும்பல் நாட்டு துப்பாக்கிகளை விற்பனை செய்துவரும் நிலையில், இந்த கும்பல் ஜெர்மனியில் தயாரான நவீன வகை ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கிகளை விற்று வந்துள்ளது. இந்த வகை துப்பாக்கி ஒன்றின் விலை, ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த துப்பாக்கிகளை ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பலருக்கும் இந்த கும்பல் விற்பனை செய்து வந்துள்ளது. குறிப்பாக பெல்லாரி மாவட்டதை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த எம்.எல்.ஏ, ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமானவர். அவரது பெயரை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டாம் என்று காவல்துறை கருதுகிறது.
அந்த எம்.எல்.ஏவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழக மாநிலங்களில் ஊடுருவியுள்ள நக்சலைட்டுகளுக்கும் இந்த துப்பாக்கி சப்ளை செய்யப்பட்டிருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.