20 தமிழர்கள் சுட்டுக்கொலை: பதற்றம் நீடிப்பு… ஆந்திராவுக்கு 2 வது நாளாக பேருந்துகள் நிறுத்தம்
ஹைதராபாத்: செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் பதற்றம் நீடிப்பதால், சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர் ஆகிய ஆந்திராவின் முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இரண்டாவது நாளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கான பேருந்து போக்குவரத்தை ஆந்திர அரசு இன்று நிறுத்தி உள்ளதை அடுத்து பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
செம்மரக்கட்டைகள் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழர்கள் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டு, துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் நேற்று ஆந்திரா பேருந்துகளை அடித்து நொறுக்கினர். இதில் 8 பேருந்துகள் சேதம் அடைந்தன.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தமுக பொதுச் செயலாளர் அதியமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பாலன் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதற்கான குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை புழல் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

தமிழர்கள் மீது இனியும் ஆந்திர அரசு தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை எச்சரிக்கும் விதமாகவும், பலியான தமிழர்களுக்கு ஆந்திரா அரசு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழர் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை தமிழர் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என கைது செய்யப்பட்ட அதியமான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பதற்றத்தை தணிக்கும் வகையில் இரண்டாவது நாளாக இன்று சென்னை மற்றும் வேலூர் பகுதியில் இருந்து ஆந்திராவிற்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
தமிழக, ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கல்வீச்சு ஆகியவை நடைபெற்று வருவதை அடுத்து தமிழகத்திற்கான பேருந்து போக்குவரத்தை ஆந்திர அரசு இன்று நிறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications