"லாபம் மட்டுமே உங்களுக்கு குறிக்கோள்"- செல்போன் நிறுவனங்கள் மீது ஆந்திர முதல்வர் பாய்ச்சல்
ஹைதராபாத்: உங்களால்தான் மீட்பு பணிகளில் பாதிவேலை கெட்டுவிட்டது, வெறும் லாபம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் நோக்கமாக உள்ளது என்று செல்போன் நெட்வொர்க் அதிகாரிகளை பார்த்து எரிந்து விழுந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஹுட்ஹுட் புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு செல்போன் டவர்கள் செயல்படாததால் ஆந்திராவில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு இன்று செல்போன் நெட்வொர்க் ஆபரேட்டர்களின் உயர் மட்ட குழு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது நாயுடு தனது பொறுமையை இழந்து காணப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு கூறியதாவது: உங்கள் நெட்வொர்க்குகள், புயல் போய் இரு நாட்களாகியும் ஏன் செயல்படவில்லை என்பதற்கு நேரடியாக பதிலை சொல்லுங்கள். மின்சாரம் இல்லை என்றால் 5 குதிரைசக்தி கொண்ட ஒரு டீசல் ஜெனரேட்டரை வைத்து உங்கள் டவர்களை நீங்கள் இயக்கியிருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் மின்சாரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறீர்கள். அதாவது, உங்களுக்கு லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கிறது. டீசலுக்கு செலவிட கூட உங்களுக்கு மனது வரவில்லை.
நீங்கள் அரசையும், மக்களையும் ஏய்த்து வருகின்றீர்கள். மீட்பு பணியில் 50 சதவீதம் தகவல் தொடர்பால் பாதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் உத்தரவிட முடியாதபடி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வந்திருந்தபோது கூட தொலைபேசி வேலை செய்யாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினோம்.
செல்போன் நெட்வொர்க்குகள் ஒரு திட்டத்தோடு வர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த விலையில் செல்போன் பேச திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள். ஆங்காங்கு செல்போன்களை சார்ஜ் செய்யும் பூத்துகளை நிறுவுங்கள். இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டார்.
பாரதி குரூப் சேர்மன் சுனில் மிட்டல் கூறுகையில், அக்டோபர் 18ம்தேதி மாலைக்குள் செல்போன் நெட்வொர்க்குகள் பழைய நிலைக்கு திரும்பும் என்றார்.