இணைகிறது கிருஷ்ணா-கோதாவரி... ஆந்திராவின் 60 ஆண்டு கனவுத் திட்டம் நனவாகிறது!
ஹைதராபாத்: ஆந்திராவில் ஏற்படும் கடும் வறட்சியைப் போக்கும் வகையில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகள் வரும் 15ம் தேதி முறைப்படி இணைக்கப் படுகின்றன.
ஆந்திராவின் 60 ஆண்டுகால கனவுத் திட்டம் கிருஷ்ணா - கோதாவரி நதிகளை இணைப்பது. கடந்த 1950ம் ஆண்டு கே.எல்.ராவ் ஆந்திர வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த போதே இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. பின்னர் மீண்டும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்த திட்டம் குறித்து விரிவாக திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டம் வரும் 15ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த விழாவில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கிறார்.
இதுகுறித்து ஆந்திர மாநில அரசின் ஆலோசகர் பரகால பிரபாகர், ஹைதராபாதில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:
கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளை இணைப்பதன் பயனாக, 80 டி.எம்.சி. அளவு கோதாவரி நதி நீர், வறண்ட ராயலசீமா பகுதிக்கு கிடைக்கும். மேலும், 300 டி.எம்.சி. தண்ணீர் பல்வேறு ஏரிகள், அணைகள் ஆகியவற்றில் சேமிக்கப்பட்டு, பருவமழை பொய்க்கும் காலத்தில் மாநிலத்தின் வறட்சியை சமாளிக்கப் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம், ஆந்திரம் வறட்சி இல்லாத மாநிலமாக விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications