ஆசிரியையை பின்தொடர்ந்து சென்று மானபங்கப்படுத்திய ஆந்திர அமைச்சரின் மகன் கைது
ஹைதராபாத்: ஆசிரியையை காரில் பின்தொடர்ந்து சென்று மானபங்கப்படுத்திய ஆந்திர மாநில சமூக நலத்துறை அமைச்சர் ரவீலா கிஷோரின் மகன் இன்று கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநில சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் ரவீலா கிஷோர். அவரது மகன் சுஷீல் ரவீலா(30). கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாத்திமா பேகம் என்ற ஆசிரியை பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது காரில் வந்த சுஷீல் பாத்திமாவை பின்தொடர்ந்துள்ளார். மேலும் அவர் பாத்திமாவை பிடித்து காருக்குள் இழுத்துள்ளார். பாத்திமா அவரின் பிடியில் இருந்து தப்பி கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் குடிபோதையில் இருந்த சுஷீல் மற்றும் அவரது கார் டிரைவர் ரமேஷ் ஆகியோரை அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது சுஷீல் தப்பியோடிவிட்டார். போலீசாரும் அவரை தேடிப் பிடிக்க முயற்சி செய்யவில்லை என்பதை அறிந்த பாத்திமா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுஷீல், ரமேஷுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் சுஷீல் மற்றும் ரமேஷ் ஆகியோர் இன்று காலை போலீசில் சரண் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

சாலையில் சென்ற நாய்க்குட்டியை காப்பாற்றவே காரை நிறுத்தியதாகவும், பாத்திமா அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஊரை கூட்டி தன்னை அடிக்க வைத்ததாகவும் சுஷீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில்,
நானும், என் குடும்பமும் சட்டத்தை மதிப்பவர்கள். இதை சட்டத்தின் போக்கில் விட்டுவிடுகிறேன். என் மகன் எந்த தவறும் செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்கட்சிகள் செய்த சதி இது என்றார்.












Click it and Unblock the Notifications