திருவிழா நடக்கும் பக்கமே வரக்கூடாது: பிச்சைக்காரர்களுக்கு ரூ.5,000 அளிக்கும் ஆந்திரா அரசு
ராஜமுந்திரி: புஷ்கரம் திருவிழா முடியும் வரை கோதாவரி ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வராமல் இருக்க பிச்சைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அளிக்கிறது ஆந்திர அரசு.
கோதாவரி ஆறு ஓடும் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது புஷ்கரம் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 29 பேர் பலியாகினர்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழா வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழா முடியும் வரை கோதாவரி ஆற்றங்கரை பக்கம் வராமல் இருக்க பிச்சைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க ஆந்திர மாநில அரசு முன் வந்துள்ளது.
அவர்கள் திருவிழா நடக்கும் பக்கம் வராமல் இருந்தால் பணத்துடன் உணவும் அளிக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி திருவிழா துவங்கியதில் இருந்து ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அரசு இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டு இல்லாத பிச்சைக்காரர்கள் மற்றும் என்டிஆர் பரோசா பென்ஷன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெறும் பிச்சைக்காரர்களுக்கு தான் ரூ.5 ஆயிரம் அளிக்கப்படும். ஏனென்றால் ரூ.5 ஆயிரம் பணத்திற்காக ரேஷன் கார்டு வைத்துள்ள உள்ளூர்மக்கள் தங்களை பிச்சைக்காரர்கள் என்று கூறுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்க அதிபர் கிளிண்டன் ஆந்திரா வந்தபோது ஹைதராபாத்தில் இருந்த பிச்சைக்காரர்களுக்கு பணத்தை கொடுத்து மறுவாழ்வு மையங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.