தொடர் கனமழை.. மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா... மீட்புப் பணியில் ராணுவம் தீவிரம்
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஹைதராபாத் உட்பட பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல இடங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ள மீட்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, நகரின் பல பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு அதிகாரிகளும், தன்னார்வ தொண்டர்களும் வழங்கி வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 21 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

இதுவரை வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நேற்று முன்தினம் மேடக் மாவட்டத்தில் மட்டும் நான்கு பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இன்னும் 5 நாட்களுக்கு பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்துள்ளது மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications