'இன்ஸ்டாகிராம்' லைக்ஸுக்கு ஆசைப்பட்டு.. உயிரை விட்ட இளைஞர்.. பைக் சாகசத்தின் போது விபரீதம்
அமராவதி: இன்ஸ்டாவில் வீடியோ செய்வதற்காக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காகவும், ஒன்றுக்கும் உதவாத லைக்ஸ்களை வாங்குவதற்காகவும் தனது வாழ்க்கையையே அந்த இளைஞர் இன்றைக்கு இழந்திருக்கிறார்.
நிதர்சனம் எது, மாயை எது என்று கூட தெரியாமல் சமூக வலைதளங்களில் சிக்கி சீரழியும் இளம் தலைமுறையினருக்கு இந்த இளைஞருக்கு நேரிட்ட சம்பவம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடரும் சமூக வலைதள விபரீதங்கள்..
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஒருபுறம் ஆக்கப்பூர்வமான விஷயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க, மறுபுறம் அவற்றால் ஆபத்துகளும் விபரீதங்களும் உருவாகிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக, இன்றைய தலைமுறை இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களுள் மூழ்கி தங்கள் வாழ்க்கை இழந்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், இவற்றால்தான் நாம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது கூட அவர்களுக்கு புரிவதில்லை. எதற்கும் பிரயோஜனப்படாத 'லைக்ஸ்'களுக்காக சில இளைஞர்கள் செய்யும் செயல் அவர்களுக்கே ஆபத்தாகி விடுகிறது. இதில் சில நேரங்களில் உயிர் பலி வரை கூட சென்று விடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம்தான் ஆந்திராவில் நடந்துள்ளது.

பைக் சாகசம்தான் வாழ்க்கை..
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (26). பொறியியல் பட்டதாரியான இவர், வேலைக்கு எங்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். பைக்கில் சாகசம் செய்வதையே வாழ்க்கை லட்சியமாக கொண்டிருந்த சாய் கிருஷ்ணா அடிக்கடி விபத்துகளிலும் சிக்கியுள்ளார். இருந்தபோதிலும், சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவதை அவர் விடவில்லை. பெற்றோர் எவ்வளவு கூறியும் இந்த செயலை அவர் விடவில்லை எனத் தெரிகிறது.

பலர் சொல்வதை கேட்டு வீடியோ..
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாகசம் என நினைத்து அவர் பைக்கில் செய்யும் சேட்டைகளை ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் சாய் கிருஷ்ணா பதிவிட்டு வந்துள்ளார். சாலையில் செல்லும் போது திடீரென வீலிங் செய்வது, கையை விட்டு பைக் ஓட்டுவது போன்ற வீடியோக்களை அவர் பதிவிடுவதும், அந்த வீடியோக்களுக்கு லைக்ஸ் குவிவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. மேலும், அந்த வீடியோக்களுக்கு கீழே பலர், "அந்த சாகசத்தை செய்யுங்கள்", "இப்படி பைக் ஓட்டுங்கள்" எனக் கூறுவதையும் கேட்டு, அதுபோல செய்து சாய் கிருஷ்ணா வீடியோ போட்டு வந்திருக்கிறார்.

விபத்து - மரணம்
இந்த சூழலில், கடந்த 12-ம் தேதி யாரோ ஒருவர் கூறியதற்காக ஓடும் பைக்கில் எழுந்து நிற்பது போன்ற வீடியோவை அவர் செய்துள்ளார். அதன்படி, தனது நண்பனை செல்போனில் வீடியோ எடுக்கக் கூறிய சாய் கிருஷ்ணா, பைக்கை வேகமாக ஓட்டி அதன் மீது ஏறி நின்றார். ஆனால், பைக் திடீரென நிலைத்தடுமாறவே அதில் இருந்து கீழே விழுந்த சாய் கிருஷ்ணாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது நண்பர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், கோமாவுக்கு சென்ற சாய் கிருஷ்ணா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications