வாஸ்துப்படி உருவாகும் ஆந்திராவின் புதிய தலைநகர்...!
அமராவதி, ஆந்திரா: அதி நவீன நகராக ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி உருவாகும் அதே நேரத்தில் வாஸ்துப்படியும் அதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதற்கான பணியில் அவரது வாஸ்து ஆலோசகர் என்.ராகவய்யா முழு மூச்சில் இறங்கியுள்ளார்.
அமராவதி நகரில் முகாமிட்டு இதுதொடர்பான ஆலோசனைகளையும் ராகவய்யா வழங்கி வருகிறார். அதன்படி அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனராம்.
புதிய தலைநகருக்கு அக்டோபர் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதற்கான முன்கூட்டிய பூஜைகள் தற்போது தொடங்கியுள்ளன.

அமராவதி
ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாகி விட்டது. தெலுங்கானா பகுதிக்குள் வரும் ஹைதராபாத் இரு மாநிலங்களின் பொதுவான தலைநகராக 10 வருடம் வரை இருக்கும். இதையடுத்து தனது புதிய தலைநகராக அமராவதியை அடையாளம் கண்டுள்ளது ஆந்திரா.

கிருஷ்ணா நதியோரம்
கிருஷ்ணா நதிக்கரையோரமாக இந்தப் புதிய தலைநகரா உருவாக்குகிறது ஆந்திர அரசு. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதி நவீன நகராக இது உருவாகவுள்ளது. அதேசமயம் முற்றிலும் வாஸ்துப்படியும் இதை உருவாக்குகிறார்களாம்.

சிறப்புப் பூஜைகள் - ஹோமங்கள்
அக்டோபர் 22ம் புதிய தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையொட்டி வாஸ்துப்படியான பூஜைகளும், ஹோமங்களும் அமராவதியில் தொடங்கியுள்ளன.

22ம் தேதி வரை நீடிக்கும்
இந்தப் பூஜைகளும், ஹோமங்களும் அக்டோபர் 22ம் தேதி வரை தொடருமாம். இந்தப் பூஜைகளையும், ஹோமங்களையும் நாயுடுவின் வாஸ்து ஆலோசகரான ராகவய்யா நேரில் போய் மேற்பார்வையிட்டு வருகிறார்.

மேடை அமைப்புப் பணி
மேலும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான மேடை அமைப்பிலும் வாஸ்து பார்க்கப்படுகிறதாம். விவிஐபிக்கள் மற்றும் விபிஐக்கள் மேடைக்கு வரும் நுழைவுப் பாதை கிருஷ்ணா நதியை நோக்கி பார்க்கும்படி அமைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளாராம். ராகவய்யாவுக்கு உதவியாக கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் உடன் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications