14 வயது மகளை சீரழித்தவரை விருந்துக்கு அழைத்து மர்ம உறுப்பை எரித்த தந்தை
டெல்லி: டெல்லியில் தனது 14 வயது மகளை பலாத்காரம் செய்த 45 வயது நபரை விருந்துக்கு அழைத்து அவரின் மர்ம உறுப்பை எரித்து பிறகு அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த நபர் போலீசில் சரண் அடைந்தார்.
வடகிழக்கு டெல்லியில் வசித்து வரும் நபர் ஒருவரின் 14 வயது மகளை திருமணமான 45 வயது நபர் 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை அந்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். விருந்துக்கு வந்த நபரை நாற்காலியில் கட்டிப்போட்டு அவரின் மர்ம உறுப்பை எரித்தார். பின்னர் அந்த நபரை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.
கொலை செய்த பிறகு காவல் நிலையத்திற்கு சென்று தனது மகளை பலாத்காரம் செய்தவரை எவ்வாறு துன்புறுத்தி கொலை செய்தார் என்பதை விவரித்து சரண் அடைந்துள்ளார். அந்த நபரை கொலை செய்யாவிட்டால் எங்கே பலாத்கார சம்பவத்திற்கு உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் தனது மகளை குறை கூறுவார்களோ என்று சிறுமியின் தந்தை அஞ்சியுள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சிறுமியின் தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.