மத்திய அரசு கொண்டுள்ள வந்துள்ள ‘ஜோக்பாலை’ அன்னா ஏற்றது ஆச்சர்யமே...: கெஜ்ரிவால்
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவை, ஜோக்பால் என விமர்சித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
வலுவான லோக்பால் மசோதா வேண்டி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப் படும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்து தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார் ஹசாரே. அவருடன் அவரது ஆதரவாளர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு லோக்பால் மசோதாவுக்கு அனுமதி அளித்து, மற்ற கட்சிகளின் ஆதரவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதனை அன்னா ஹசாரேவும் வரவேற்றுள்ளார். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது:-
அரசு கொண்டு வந்துள்ளது லோக்பால் அல்ல, ஜோக்பால். கடந்த 2011-ம் ஆண்டு அன்னா ஹசாரேவிடம் உறுதி அளிக்கப்பட்ட 3 விஷயங்களும் இந்த மசோதாவில் இல்லை. பிறகு எப்படி அன்னா ஹசாரே இதை வரவேற்றார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள். அதே சமயத்தில், வலிமையான ஜன லோக்பால் மசோதாவுக்காக இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம்' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications