ஊழலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை - அன்னா ஹசாரே எச்சரிக்கை
டெல்லி: தற்போதைய பாஜக ஆட்சிக்கும், கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஊழல் இன்னும் ஒழிக்கப்படவில்லை, ஊழலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர தன்னை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு வேறு வழி இல்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் காந்தியவாதி அன்னா ஹசாரே. அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளான வெளிநாட்டில் பதிக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வருதல், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குதல் உள்ளிட்டவைகளை மோடி மறந்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை. பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் ரூ.15 லட்சம் வைக்கப்படும் என்று கூறினீர்கள், ஆனால் இதுவரை ரூ.15 கூட வரவில்லை. வேளாண் துறையில் எதுவும் செய்யவில்லை இதனால் விவசாயிகளின் தற்கொலை தான் அதிகரித்துள்ளது.
அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. அதிகாரம் என்பது ஒருவகையான போதை என்றே தெரிகிறது. ஆனால் சாமானியர்களான எங்களால் ஊழலுக்கு எதிராக இன்னொரு போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதையும் கடிதத்தில் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்,லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் சீராக செயல்படும்'' என்ற தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்தியுள்ள அன்னா ஹசாரே, இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதிலே இல்லை என்றும் கூறியுள்ளார்.
''பிரதமருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பிரதமர் பதிலளிக்க முடியாது. எனினும், நாட்டுக்காக தங்களையே அர்பணித்துள்ள சமூக ஆர்வலர்கள் அளிக்கும் கடிதங்களுக்கு பிரதமர் பதில் அனுப்பலாம்.'' என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹசாரே.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிக அளவில் இருந்ததது. லஞ்சம் வழங்கப்பட்டால் மட்டுமே வேலை நடைபெற்றது. மோடியின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள் தற்போதும் அதே நிலையை தான் எதிர்கொள்கின்றனர். பணம் இல்லாமல் ஒரு வேலையும் நடைபெறுவதில்லை. பணவீக்கமும் குறையவில்லை.
கடந்த காலங்களில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது தொலைபேசியில் என்னோடு பேசுவார். வாஜ்பாய் புணே வரும்போது, என்னை சந்திக்காமல் சென்றதில்லை. மன்மோகன் சிங் கூட எனது கடிதங்களுக்குப் பதில் அனுப்பியுள்ளார். ஆனால், பிரமதர் மோடி தன்னை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார் ஹசாரே.












Click it and Unblock the Notifications