ஆரம்பிச்சுட்டார் அன்னா ஹசாரே..லோக்பால் மசோதாவுக்கு மறுபடியும் உண்ணாவிரதமாம்!
டெல்லி: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தாம் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அன்னா ஹசாரே அனுப்பியுள்ள கடிதத்தில், வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன். இதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட ஜனாபதியிடம் பேசவேண்டும்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் என்னுடன் உண்ணாவிரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு உங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு துரோகம் செய்துவிட்டது. நான் 2011ஆம் ஆண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதே உங்கள் அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்தான்..ஆனால் நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிந்து போனதே தவிர வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
நிலம் கையகப்படுத்துதல் மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா, ஓய்வூதிய மசோதாவை நிறைவேற்றிய நீங்கள் ஏன் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவில்லை. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் என்று கூறியுள்ளார்.