ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மீது மற்றொரு மாணவியும் பாலியல் புகார்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மீது மற்றொரு சட்டக்கல்வி பயிற்சி மாணவியும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்விக்கான தேசியப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மீது கடந்த 6ந் தேதி பாலியல் புகாரைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார விவகாரத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது, அந்த நீதிபதி ஒரு ஹோட்டல் அறையில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று அந்த மாணவி தனது இணையதள ப்ளாக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.சதாசிவம் முன் சமீபத்தில் எழுப்பப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், மாணவியின் புகார் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த அதே கல்வி நிலையத்தில் படிக்கும் மற்றொரு பயிற்சி மாணவி கடந்த 11ந் தேதி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கடந்த ஆண்டு என்னை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கினார். அப்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேராசிரியர் எஸ்.என்.சிங் என்பவர் அளித்த புகாரின்பேரில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் குறித்து டெல்லி போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications