'அந்தரத்தில் அல்லாடும்' நில ஆர்ஜித மசோதா: மீண்டும் அவசர சட்டத்தை பிறப்பிக்கும் மத்திய அரசு!!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நிறைவேறினாலும் ராஜ்யசபாவில் இன்னமும் நில ஆர்ஜித மசோதா நிறைவேறாததால் நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தத்துக்கு மீண்டும் ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் பாரதிய ஜனதா அரசு கடந்த ஆண்டு சில திருத்தங்களை செய்தது. அந்த சட்டத்திருத்தம் அவசர சட்டமாக வெளியிடப்பட்டது.
இந்த அவசர சட்டத்தின் மூலம் நிலத்தை கையகப்படுத்தும் போது விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை என்பது உள்ளிட்ட அம்சங்கள் நடைமுறைக்கு வந்தன. இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணா தி.மு.க. ஆதரவுடன் கடந்த 10-ந்தேதி நாடாளுமன்ற லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறியது. ஆனால் ராஜ்யசபாவில் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேறினால்தான் அதை அமல்படுத்த முடியும்.
ஆனால் ராஜ்யசபாவில் பா.ஜ.க. அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள், விவசாயிகளிடம் இந்த சட்டத்திருத்தம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த சட்டத்திருத்தத்தில் மாற்றங்கள் செய்ய எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வு முடிவடைந்துவிட்டது.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத்துக்கான அவசர சட்ட மசோதா 6 மாதத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது விதியாகும். அந்த 6 மாத கால அவகாசம் ஏப்ரல் 5-ந்தேதியுடன் முடிகிறது.
எனவே நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத்துக்கான அவசர சட்டம் 5-ந்தேதியுடன் காலாவதி ஆகி விடுகிறது. இதை தொடர்ந்து நில ஆர்ஜிதத்துக்கு மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்பிறகு ஏப்ரல் 20-ந்தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டத்திருத்ததுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications