விவசாயிகள் செத்துக் கொண்டிருக்க....சொகுசு வாழ்க்கைக்கு ரூ.100 கோடியா?... நாயுடு மீது பாயும் அம்புகள்
ஹைதராபாத்: பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆந்திர மாநிலத்தில் ஏழை விவசாயிகளும் வறுமையில் மடிந்து கொண்டிருக்க சொந்த செலவுக்கு 100 கோடி ரூபாய் செலவழித்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களில் மட்டும் தனது அலுவலகங்கள் மறு சீரமைத்ததற்கும், தனியார் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தி அரசுப் பயணம் மேற்கொண்டதற்கும், இவ்வளவு பெரிய தொகையை செலவழித்துள்ளார்.

மேலும் புதிய தலைநகரம் அமைக்கும் பணிக்காக மக்களிடமிருந்து பண வசூல் வேறு செய்கிறார் நாயுடு. இதுவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது செலவைக் கட்டுப்படுத்த முடியாத நாயுடு எப்படி மக்களிடம் பணம் கேட்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.
அலுவலகங்கள் சீரமைப்புக்கு சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டியது தானே என்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. ஹைதராபாத், விஜயவாடாவில் உள்ள தனது அலுவலகங்களை பெரும் பொருட் செலவில் புதுப்பித்துள்ளார் நாயுடு. இதற்கு அரசுப் பணத்தைத்தான் அவர் செலவிட்டார்.
தலைமைச் செயலகத்தில் அவரது அலுலகமும் பெரும் பொருட் செலவில் புதுப்பிக்கப்பட்டன. மேலும் ஹைதராபாத்தில் உள்ள லேக் வியூ கெஸ்ட் ஹவுஸானது ரூ. 7 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.
மக்களின் வரிப்பணத்தை எடுத்து தண்ணீராக செலவிட்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு என்று குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. மக்கள் பணத்தை சொகுசு வாழ்க்கைக்கு செலவிட்ட சந்திரபாபு நாயுடு மீது பாய எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.












Click it and Unblock the Notifications