"என்எஸ்ஜி".. சீனா மட்டுமல்ல.. இந்த 5 நாடுகளும்தான் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கின்றன!
டெல்லி: அணு சக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் இந்தியாவை உறுப்பு நாடாக சேர்க்கவிடாமல் சீனா மட்டுமின்றி மேலும் 4 நாடுகளும் தீவிர எதிர்ப்பு காட்டி வருகின்றன.
அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) 48 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளன. இந்த குழுவில் இடம் பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. இதற்காக இந்தியா கடந்த மே 12ம் தேதி விண்ணப்பித்தது. இதேபோல் இந்த குழுவில் சேர பாகிஸ்தானும் விண்ணப்பித்து உள்ளது.
அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

அணு ஆயுத பரவல் தடை
ஆனால் இந்த குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றும், இந்தியாவை இந்த குழுவில் சேர்த்தால் தெற்கு ஆசியாவில் அணுஆயுத போட்டி அதிகரிக்கும் என்றும் சீனா கூறுகிறது.

மேலும் நான்கு நாடுகள்
இதேபோல துருக்கி, பிரேசில், மெக்சிகோ, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் துருக்கி ஒருபடி மேலேபோய், இந்தியாவை அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் சேர்க்க வேண்டுமானால், பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது.

காத்திருக்கும் இந்தியா
இதில் மெக்சிகோவும், சுவிட்சர்லாந்தும், இந்தியாவின் முயற்சிக்கு கைகொடுப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் இப்போது பின்வாங்கியுள்ளன. எனவே அடுத்ததாக இதுகுறித்து நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்காக இந்தியா காத்துக்கொண்டுள்ளது.

உருவான கதை
1974ம் ஆண்டு அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழு உருவாக்கப்பட்டது என்பதும், அணு ஆயுத ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள இந்த நாடுகளுக்குள் புரிந்துணர்வு உள்ளது என்பதும் நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications