நீதிபதி தேர்வுக் குழு.. நீதிபதி கர்ணனின் உத்தரவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!!
சென்னை: சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நியமித்த குழுவுக்கு தடை விதித்து நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவு பிறப்பித்தார். அந்த தேர்வுக் குழுவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.தனபாலன், ஆர்.சுதாகர், டி.ஹரிபரந்தாமன், என்.கிருபாகரன், ஆர்.மாலா மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தேர்வுக் குழு கடந்த ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி வரை சிவில் நீதிபதி பதவியிடங்களுக்கான நேர்காணலை நடத்துவதாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 16-ந் தேதியன்று உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் தாமாக முன்வந்து இந்த தேர்வுக் குழு தொடர்பான வழக்கை எடுத்துக் கொண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனபாலன், சுதாகர், ஹரிபரந்தாமன் ஆகியோர் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி, அவர்கள் சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான குழுவில் இடம்பெற தகுதி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தலைமை நீதிபதியின் நிர்வாக உத்தரவுக்கு தாம் தடை விதிப்பதாகவும் சிவில் நீதிபதிகள் பதவிக்கான நேர்காணலை நடத்தக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத் தலைவருக்கும் நீதிபதி கர்ன்ணன் உத்தரவிட்டார்.
நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற வேறு இரு நீதிபதிகளான எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் ஏப்ரல் 17-ந் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனாலும் நீதிபதி கர்ணனோ, இந்த வழக்கை தாமே விசாரிக்க ஏப்ரல் 30-ந் தேதி பட்டியலிடும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தினார். அத்துடன் தனது முந்தைய உத்தரவை உறுதி செய்தததுடன் தமது நீதிமன்றப் பணியில் குறுக்கிட்டால் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தலித் நீதிபதியான தம்மை தலைமை நீதிபதி துன்புறுத்துவதால் அது குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத் தலைவருக்கு இந்த நீதிமன்றம் அறிவுறுத்தும் என்றும் எச்சரித்திருந்தார்.
இது சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தேசிய அளவில் நீதித்துறையில் கர்ணனின் அதிரடி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான முதன்மை பெஞ்ச் இன்று இம்மனுவை விசாரித்து நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.












Click it and Unblock the Notifications