ஜெ. விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: ஆச்சார்யாவின் பரிந்துரை கடிதம் மீது கர்நாடகா இன்று முடிவு?
பெங்களூரு: ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்ற அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் பரிந்துரை கடிதம் மீது கர்நாடகா அரசு இன்று முடிவை அறிவிக்க உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
இத் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தீர்ப்பு நகலை வாங்கி பரிசீலித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, தீர்ப்பில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அவருடைய வருமானத்தைவிட 76.75% அதிகம் இருக்கிறது. ஆனால் 8.12% மட்டுமே வருமானத்தைவிட சொத்து அதிகம் இருப்பதாகவும் அதன் அடிப்படையில் விடுதலை செய்வதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தீர்ப்பு சரியா?
ஜெயலலிதாவின் வருமானத்தை கணக்கிட்டதில் தவறு நடந்து உள்ளது. அதன்படி பார்த்தால் தீர்ப்பு சரிதானா என்ற கேள்வி எழுகிறது எனக் கூறி இருந்தார்.

குமாரசாமி ஆலோசனை
இதனிடையே நீதிபதி குமாரசாமியும் நேற்று முன்தினம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு திடீரென்று வந்து தனது உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன், தீர்ப்பு விவரங்களையும் பரிசீலனை செய்துவிட்டு சென்றார்.

சட்டத்துறை செயலர் கடிதம்
இந்த நிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவுக்கு, கர்நாடக சட்டத்துறை செயலாளர் செங்கப்பா ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் சொத்து குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதா? அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்றும், அதுபற்றி கருத்து தெரிவிக்கும்படியும் கூறப்பட்டு இருந்தது.

ஆச்சார்யா பதில்
இதற்கு பதிலளித்து ஆச்சார்யா எழுதிய கடிதத்தில், 'ஜெயலலிதா மீதான மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல அடிப்படை தவறுகள் இருக்கின்றன.குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாங்கிய கடன், கட்டிட மதிப்பீடு, சுதாகரனின் திருமண செலவுகள் ஆகியவற்றை நீதிபதி குமாரசாமி ஏற்றுக்கொண்ட விதம் சட்டத்துக்கு எதிராக இருக்கிறது. இவ்வழக்கில் கூட்டுச்சதி, பினாமி சட்டத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதனை ரத்து செய்தது தொடர்பாக நீதிபதி குமாரசாமி போதிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மேல்முறையீட்டு தகுதியானது. தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று கர்நாடகா முடிவு?
ஆச்சார்யாவின் இந்த பதிலை பரிசீலனை செய்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது குறித்த முடிவை கர்நாடக அரசு இன்று அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications