மத்திய துணை ராணுவ படையின் முதல் பெண் டிஜிபியாக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம் !
டெல்லி: மத்திய அரசின் துணை ராணுவ படை பிரிவான எஸ்எஸ்பியின் தலைமை இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
கடந்த 1980ம் ஆண்டில், தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம், தமிழக போலீசில் பல பதவிகளை வகித்தவர். கடைசியாக, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை இயக்குனராக இருந்த போது, மத்திய அரசு பணிக்காக அர்ச்சனா ராமசுந்தரத்தின் பெயரை கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு அனுப்பியது.
இதைத்தொடர்ந்து அர்ச்சனா ராமசுந்தரத்தை சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி மத்திய அரசு நியமித்தது. ஆனால் தமிழக அரசு பணியில் இருந்து விடுவிக்கப்படாத நிலையில், அர்ச்சனா ராமசுந்தரம் டெல்லி சென்று சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்று பணியில் சேர்ந்தார்.
மத்திய அரசு பணிக்கு செல்லும் முன், தமிழக அரசிடம் அனுமதி கேட்கவில்லை' என்று கூறி ஜெயலலிதா அரசு அவரை, பணியிடை நீக்கம் செய்தது. இதனால், பல சட்ட சிக்கல்களையும், போராட்டங்களையும் அர்ச்சனா சந்தித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, ஓராண்டாக அவருக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை. பின்னர் கடந்த ஜூன் மாதம் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குனராக மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில் மத்திய அரசின் துணை ராணுவ படை பிரிவான சாஸ்த்ரா சீமா பால் எஸ்எஸ்பியின் தலைமை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேபாளம் மற்றும் பூடான் எல்லையையொட்டிய இந்திய பகுதிகளை பாதுகாக்கும் பணிகளை எஸ்எஸ்பி படை மேற்கொண்டு வருகிறது. இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் போலீஸ் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா ராமசுந்தரம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, சிஆர்பிஎஃப் சிறப்புத் தலைமை இயக்குநராக உள்ள துர்கா பிரசாத், அதே படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். எல்லைப் பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநர் கே.கே. சர்மா, அதே படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாடு நிறுவனத்தின் சிறப்பு இயக்குநராக உள்ள ஏ.ஆர்.கே.. கின்னி அந்தப் பதவியுடன் சேர்த்து தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகத் துறையின் இயக்குநராகவும் நியமிக்கப்படுகிறார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு சிறப்புச் செயலராக எம்.கே. சிங்கலா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பதவிக் காலம் முடிவடைய நிர்ணயிக்கப்பட்ட நாள் வரை இந்தப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.