எல்லையில் ஊடுருவ முயன்ற 30 தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு:12 பேர் சுட்டுக்கொலை?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லைப் புறத்தில் ஊடுறுவ முயன்ற தீவிரவாதிகள் 30 பேரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அதில் 12 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 6 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளனர்.
அதேபோல், சம்பா பகுதியில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் நடத்தப் பட்ட தாக்குதளில் சிக்கி காவலர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவங்களால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில், கேரன் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுறுவ தீவிரவாதிகள் முயன்றுள்ளனர். இதை ராணுவம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட 30 தீவிரவாதிகள் ஊடுறுவ முயன்றுள்ளனர். அவர்களை ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தீவிர தேடுதல் வேட்டையும், தாக்குதலும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 10 முதல் 12 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
மச்சில் பகுதியிலும் ஊடுறுவலுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications