மேஜர் கோகாய்க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை.. ராணுவ நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஹோட்டல் ஒன்றில் தகராறு செய்தபோது கைது செய்யப்பட்ட ராணுவ மேஜர் லீதுல் கோகாய்க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ராணுவ மேஜர் கோகாய் தேசிய அளவில் ஏற்கனவே மிகவும் பிரபலமானது. கடந்த வருடம், காஷ்மீரில் ராணுவ வாகனம் ஒன்றின் முன்புறம் இளைஞர் ஒருவரை கட்டி வைத்தது போன்ற படம் வைரலாகியிருந்தது தெரியுமா? அப்படி இளைஞரை கட்டி வைத்து வாகனத்தை இயக்கிய உத்தரவிட்டது கோகாய்தான். கட்டி வைக்கப்பட்ட இளைஞர் பெயர் பரூக் தார்.
மனித உரிமை ஆர்வலர்கள் கண்டன குரல்கள் எழுப்பியதையடுத்து, கலவரக்காரர்கள் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதாக கூறி, அதற்கு பதிலடியாக இவ்வாறு செய்ததாக கோகாய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து கோகாய் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த மே 23ம் தேதி ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு பெண்ணுடனும் மற்றொரு நபருடனும் சென்றுள்ளார். அப்போது அங்கு கோகாய் ஹோட்டல் உரிமையாளருடன், தகராறில் இறங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து கோகாயை கைது செய்தனர்.
விசாரணையின்போது, சில ரகசிய தகவல்களை வழங்க அந்த பெண்மணி வந்ததாகவும், எனவே அவரிடம் உளவு விவகாரம் தொடர்பாக பேச சென்றதாகவும் கோகாய் கூறினார். ஆனால், உயர் அதிகாரியிடம், பணிநிமித்தமாக, இப்படி ஒரு பெண்ணை சந்திக்க செல்வதை கோகாய் தெரிவிக்கவில்லை.
எனவே இதுகுறித்து ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, கோகாய், தனது உயரதிகாரியிடம் தெரிவிக்காமல் பெண்ணை சந்திக்க சென்றது, சம்பவ நேரத்தில் ராணுவ பணியில் இல்லாதது, மக்களுடன் நெருங்கி பழகியது போன்ற குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது தெரியவந்தது.
எனவே, மேஜர் கோகாய்க்கு எதிராக ராணுவம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது ராணுவ நீதிமன்றம். இந்த சம்பவத்தால் ராணுவ வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.