எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு- இந்திய ராணுவ வீரர் மரணம்
ஸ்ரீநகர்: இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நாட்டு ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார், 2 வீரர்கள் காயமுற்றனர்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜோக்வான் பகுதியில் ராணுவ இன்ஜினியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் எல்லையிலுள்ள வேலிகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்த்து செப்பனிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளின் மீது தெரியாமல் அவர்கள் மிதித்துவிட்டனர். கண்ணிவெடி வெடித்ததில் இன்ஜினியரிங் பிரிவு வீரர்கள் காயமடைந்தனர்.
இதையறிந்ததும் அவர்களை மீட்க பிற பகுதிகளில் இருந்த ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர். மீட்பு பணிக்காக வந்துகொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர்
திடீர் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தினர். இதில் மாரத்தா யூனிட்டில் பணியாற்றிய 3 வீரர்கள் மீது குண்டடி பட்டது. அதில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வீர மரணமடைந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். மரணமடைந்த வீரர் ஷெபாய் பிகாலே என்றும், காயமடைந்த வீரர்கள் வினோத் குமார் மற்றும் லான்ஸ் நாயக் அமோல் குமார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.












Click it and Unblock the Notifications